Thursday, August 20, 2009

இன்றைய‌இறுதிச்ச‌ட‌ங்குக‌ளை இறுதிச்ச‌ட‌ல‌ங்க‌ளாக்குவோம்.....!

போதும்
இழந்தது போதும்
இழந்து கொண்டிருப்பது
வாழ்க்கையை மட்டுமல்ல
வசந்தமுள்ள வரலாற்றையும்தான் ....!

சிங்களத்து சிப்பாய்களே
நீங்கள் வீரர்கள் அல்ல
வெறியூட்டப்பட்ட வீணடிமைகள்
இது
உங்களது உணர்வுப்போரல்ல
உரிமைப் போரல்ல
இலட்சியப் போருமல்ல
சில
சிங்கள சீரழிப்பாளர்களின்
சினத்தின் கணத்தால்
நடக்கும் தூண்டுதல் போர் ....!

ஏக காலமாய்
எங்கள் உணர்வுகளை
காரி உமிழ்கிறோம்
உமிழ்நீராய் மட்டுமே
அது
உணர்வுநீராய் மாறி
உருவெடுக்கும் முன்
விழித்துக்கொள்ளுங்கள்....!
இது
எதிரிக்கான எச்சரிக்கை ....!

எமது அரசின் நிலையோ
அவமானப்படத்தக்கது
அண்டைவீட்டுத் தமிழனுக்கு
அமைதிபேச்சுவார்த்தையாம்....!
எதிர்வீட்டு சிங்களனுக்கு
ஏவுகணை சப்ளையாம்....!

ஒரு உயிர்ப்படுகொலையை காட்டி
ஓராயிரம் இனப்படுகொலை ....!

அதிகார அக்னிச்சிறகுகளின் கையில்
அப்பாவித் தமிழர்கள்
தடுக்கவேண்டிய தலைமைகள்
தள்ளாடுது மருத்துவமனையில் ....!

சொற்போரில் சொல்லாயுதம் ஏந்தி
சோர்வடைந்த எம் தமிழன்
உயிராயுதம் ஏந்தி
உலகையே விழிக்கச் செய்த
எம் முத்துகுமரன்
திரும்பி வருவானேயானால்
வெற்றிகளையும் வியர்வைகளையும்விட
வேதனைகளே அதிகம் ....!

இறந்த கொள்கையை மறந்து
இளம் நாடார் என பறை சாற்றிய
சாதிச்சங்கங்களுக்கு எமது சவுக்கடிகள் ....!

சிதைந்த உடல்களும்
புதைந்த சடலங்களும்
திரும்பி வருமேயானால்
இருவரை ஏளனமாய் பார்க்கும்
ஒருவன்
சிங்களன்-எதிரியாக
மற்றொருவன்
இந்தியன்-துரோகியாக ....!

இலட்சங்களில் உயிர்களை இழந்தும்
இலட்சியத்தை கைவிடாத
எம் வீரத்தமிழர்களுக்கு வீரவணக்கங்கள் ....!

எம் உணர்வுகளால்
நடக்கும் இவ்வறப்போர்
ஆயுதப்போரை வென்றெடுக்கும்
வெற்றியின் தூண்டுகோல்....!

சிதைக்கப்பட்டவை
உடல்களும் உரிமைகளையும் மாத்திரமல்ல
உணர்வுகளையும்தான் ....!

பிணக்குவியலில் கூட
பீரங்கித் தாக்குதல் நடத்துகிறாயே
நீயென்ன பிறவியின் பிதற்றல்களா....?

திரும்பிய இடமெல்லாம்
கூக்குரல்
"மனித நேயத்தை மசிக்கும்
மகா எமனை மண்டியிடவைத்து
மக்களை காப்பாற்ற உதவிசெய்"
சொல்லும்முன்னே உதவியது எமதரசு
சிதைக்கப்பட்ட மக்களுக்கல்ல
சிங்கள வெறிநாய்களுக்கு ....!

முத்துகுமரன்
இறக்கவில்லை இறக்கடிக்கப்பட்டிருக்கிறான்
உணர்வுகளால்....
அவனுக்கான அஞ்சலி
இலட்சங்களில் கொடையல்ல
இலட்சிய கேள்விகளுக்கான விடை
தருமா இவ்வரசு ....?

அடுத்தவன் மனைவியை
அபகரிக்க ஆயுதசப்ளை
இந்தியா ஒளிர்கிறது...!
இதுவும்
சனநாயக நாட்டின் சாதனைகளே ....!

புழுதியில் புரண்டோடி விளையாடுமென
எதிர்பார்த்த எம்மகவு மடிந்தது
கருவறையே கல்லறையாய் ....!

மருத்துவமனையை கூட
மண்டையோட்டுத் தலமாக்கிய
மரண எமன்கள் ....!

பிஸ்டல்களின் பசிக்கு
பிஞ்சுகளை இறையாக்கிய
பிணந்தின்னி கழுகுகள் ....!

உணர்வுகளின் முழக்கம்
ஊரெங்கும் ஒலித்துவிட்டது
விடிவுகாலம் ஒன்றும்
வெகு தொலைவிலில்லை
வீணர்கள் வீழ்த்தப்படுவார்கள்
வீரர்கள் வெற்றி வாகை சூடுவர்
நாளைய விடிவு
உணர்வு நெஞ்சங்களின்
உரிமை விடியலாக விடியட்டும் ....!

எண்ணக்குமுறல்களை எடுத்துரைக்க
ஆகாயம் காகிதமானால்கூட
அடங்காது ஆதங்கம் ....!

எப்போதும் அரவணைப்பான்
எதிர்த்தால் முறியடிப்பான்....!

இவண்
உணர்வுகளின் ஓசை(உயிருள்ளவரை ஒலிக்கும்)
ஜெ.இ.பிரேம்குமார்,
கப்பிகுளம்.

No comments: