Wednesday, April 21, 2010

மாவீரன் பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியதை கண்டித்து புதிய தமிழகம் கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்...




தமிழ் தேசியத்தலைவர் அவர்களின் தாயாரை திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்தும், சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 19-04-2010 அன்று காலை 10.30 மணியளவில் சென்னை மெமோரியல் அரங்கு எதிரில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக போராடிய தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் 80 வயது நிரம்பிய மூதாட்டி பார்வதியம்மாள் தமிழக மண்ணில் சிகிச்சை பெற அனுமதி மறுத்தது கண்டிக்கதக்கது. சமீபத்தில் தனது கணவனையும் இழந்து பல்வேறு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானவர். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு, மாவீரன் பிரபாகரன் தாயார் சிகிச்சை பெற மறுப்பது ஏன்? மேற்கண்ட செயல் மனிதபிமானம் தமிழக ஆட்சியாளர்களிடம் இல்லை என்பதை எடுத்து காட்டுகிறது.. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு அவர்களை திருப்பி அனுப்பிய செயலுக்கு பிராயசித்தமாக தன்னுடைய சொந்த செலவில் அழைத்து மருத்துவ சிகிச்சை கொடுத்து, தொடர்ந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் தமிழகத்தில் தங்கியிருக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் தே.சீ.சு.மணி, இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், துறைமுகம் கண்ணன், சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் பி.எஸ். ராஜா, ராஜேந்திர பிரசாத், பத்மநாபன், கப்பிகுளம் பாபு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.