Friday, November 21, 2008

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னணியில் உறங்கும் உண்மை!

12.11.2008 அன்று சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிறது. நிச்சயமாக இச்சம்பவம் கண்டிக்கத்தக்கது. எதிர்கால வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும் உருவாக்குமிடத்தில் நடந்த சம்பவம் என்பதால், பின்னணியில் நடந்தவற்றை இங்கே பொதுவில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
சட்டக்கல்லூரியில் இதுபோன்ற மோதல்கள் நடைபெறுவது புதிதல்ல. கடந்த நான்காண்டுகளாக பல மாணவர்களின் இதயங்களுக்குள் குமுறிக்கொண்டிருந்த எரிமலை சம்பவத்தன்று வெடித்து சிதறி நெருப்பாறாய் ஓடியிருக்கிறது. சென்னையில் தலைமையகம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கும் 'தேவர் பேரவை' சட்டக்கல்லூரியை தொடர்ந்து அவதானித்து வருகிறது. குறிப்பாக தென் தமிழகத்திலிருந்து படிக்க வந்த தேவர் சமுதாய மாணவர்கள் இப்பேரவைக்கு பலிகடாவாக்கப்பட்டு வருகிறார்கள். இம்மாணவர்களைக் கொண்டு 'முக்குலத்தோர் மாணவர் பேரவை' என்ற அமைப்பும் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது. முக்குலத்தோர் மாணவர் பேரவையின் முக்கிய நோக்கமே தலித் மாணவர்களை குறிவைத்து தாக்குவதாக இருந்திருக்கிறது.
மற்ற நான்கு அரசு சட்டக்கல்லூரிகளும் 'அரசு சட்டக்கல்லூரி' என்ற பெயரில் இயங்கும்போது சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரி மட்டும் ஏன் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்ற பெயரில் இயங்குகிறது என்றும் இப்பேரவை மாணவர்கள் பிரச்சினை செய்து வந்திருக்கிறார்கள். டாக்டர் அம்பேத்கர் ஒரு தலித் என்பதாலேயே அவரது பெயர் நீக்கப்படவேண்டும் என்று கடந்த நான்காண்டுகளாக இவர்களால் பேசப்பட்டு வந்தது. இம்மாணவர்கள் கல்லூரி பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களிலெல்லாம் 'சென்னை சட்டக்கல்லூரி' என்று மிகக்கவனமாக டாக்டர் அம்பேத்கர் பெயரை தவிர்த்து வந்திருக்கிறார்கள்.
'முக்குலத்தோர் மாணவர் பேரவை'யின் இதுபோன்ற செயல்கள் தேவையில்லாத பிரச்சினைகளையும், வெறுப்புகளையும் இரு தரப்பினரிடையே ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இதுபோன்ற செயல்களின் சூத்திரதாரியாக வன்முறை சம்பவத்தன்று தாக்கப்பட்ட பாரதிகண்ணன் என்ற மாணவர் இருந்திருக்கிறார். கடந்த ஆறுமாதகாலமாகவே கையில் பட்டாக்கத்தியோடு ஐந்து மாணவர்கள் துணையோடே எப்போதும் பாரதிகண்ணன் காட்சியளித்திருக்கிறார். குறைந்தது இரண்டு தலித் மாணவர்களையாவது போட்டுத்தள்ளவேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்திருக்கிறது. காவல்துறைக்கு ஏற்கனவே இதுதெரிந்து அவரை கைது செய்திருக்கிறது. அவரிடமிருந்து மூன்று நீளமான பட்டாக்கத்திகள் கைப்பற்றப்பட்டும் இருக்கிறது. ஆயினும் எந்த வழக்கும் பதியப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கல்லூரி நிர்வாகத்துக்கு பாரதிகண்ணனின் இந்த போக்கு தெரிந்தும், அவரை அடக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில் பாரதிகண்ணனும் அவர்களது நண்பர்களும் ஒருமுறை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயிலக்கூடிய தலித் மாணவர்களுக்கான தங்கும் விடுதியை தாக்கியிருக்கிறார்கள். பாரதிகண்ணன் மீது கொலைமுயற்சி உட்பட குறைந்தது 17 வழக்குகள் இருக்கிறது.
கடந்த அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி வந்தது. முக்குலத்தோர் மாணவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்திக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியிலும் வழக்கம்போல டாக்டர் அம்பேத்கர் பெயர் தவிர்க்கப்பட்டு 'சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள்' என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. அதே தினம் கல்லூரியில் தலித் மாணவர்களை சீண்டுவதும், கிண்டலடிப்பதுமான போக்கு அதிகரித்திருக்கிறது. தட்டிக்கேட்ட தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். நவம்பர் 3ஆம் தேதி தேர்வுகள் தொடங்கிய நிலையில் "எந்த தலித் மாணவராவது கல்லூரிக்குள் நுழைந்தால் தாக்கப்பட்டு கொல்லப்படுவார்கள்" என்று முக்குலத்தோர் மாணவர் பேரவை அறிவித்திருக்கிறது. அறிவித்தவாறே கல்லூரி வளாகத்தில் பேரவையை சேர்ந்த மாணவர்கள் உருட்டுக்கட்டை, இரும்புத்தடிகள், பட்டாக்கத்திகள் ஆகிய ஆயுதங்களோடு சுற்றி வந்தார்கள். தலித் மாணவர்களால் தேர்வு எழுதும் அரங்குக்குள் நுழையமுடியாத நிலை இருந்தது. சில தலித் மாணவர்கள் மட்டும் அவர்களது கண்களுக்கு தப்பி தேர்வு எழுதியிருக்கிறார்கள். இவ்விவரங்கள் வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் கல்லூரி நிர்வாகமோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தான் கடந்த 12.11.2008 அன்று தங்களின் சுயபாதுகாப்புக்காக தலித் மாணவர்கள் ஆயுதம் ஏந்தி கல்லூரிக்கு வந்திருக்கிறார்கள். தூங்கிக்கொண்டிருந்த கல்லூரி நிர்வாகம் தலித் மாணவர்கள் ஆயுதமேந்தியதுமே விழித்தெழுந்து பிரச்சினையை பெரியதாக்கவேண்டாம் என்று வலியுறுத்தியிருக்கிறது. ஆயுதமேந்திய சில மாணவர்களோ மற்ற தலித் மாணவர்களின் பாதுகாப்புக்காக தான் நாங்கள் ஆயுதமேந்தியிருக்கிறோமே தவிர முக்குலத்தோர் பேரவை மாணவர்களை தாக்க அல்ல என்று விளக்கமளித்திருக்கிறார்கள். தேர்வு எழுத வந்த தலித் மாணவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாரதிகண்ணன், ஆறுமுகம் மற்றும் அய்யாதுரை உள்ளிட்டவர்கள் குறைந்தது ஐந்து பேரையாவது கொல்லும் நோக்கத்தோடு இரண்டு அடி நீள கத்தியோடு எகிறிக்குதித்து, பலமாக குரலெழுப்பி ஓடிவந்திருக்கிறார்கள். இதைக்கண்ட தலித் மாணவர்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள்.
துரத்திவந்த பாரதிகண்ணன் மற்றும் ஆறுமுகம் இடையே சித்திரைச்செல்வன் என்ற தலித் மாணவர் மாட்டிக் கொண்டார். சித்திரைச் செல்வனின் தலையை வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். சித்திரைச்செல்வன் தலையை அசைத்ததால் கத்தி காதில் இறங்கி காது அறுபட்டு ரத்தம் சொட்டியது. சித்திரைச்செல்வனை காப்பாற்ற திரும்ப ஓடிவந்த தலித் மாணவர்களிடையே பாரதிகண்ணனும், ஆறுமுகமும் சிக்கிக் கொண்டார்கள். அன்று நடந்த விரும்பத்தகாத சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகமே முழுப்பொறுப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக சாதிவெறி கல்லூரி வளாகத்துக்குள் தலைவிரித்து ஆடியும், தலித் மாணவர்கள் இதுகுறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்த நடவடிக்கையும் நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை. பாரதிகண்ணன் போன்ற மாணவர்கள் ஆயுதங்களோடு உலாவுவதை தடுத்து நிறுத்தியிருந்தால் பிரச்சினை வன்முறையாக வெடித்திருக்காது.

உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் :
1) சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் வன்முறை ஏற்படும்வரை அமைதி காத்த கல்லூரி முதல்வர் மீதான நியாயமான நடவடிக்கை.
2) சாதி அமைப்புகள் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து மாணவர்களை தூண்டி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றுவதை கட்டுப்படுத்துதல்.
3) அனைத்து மாணவர்களுக்கும் (குறிப்பாக தலித் மாணவர்களுக்கு) தகுந்த பாதுகாப்பு உடனடியாக வழங்கப்படுதல்.
4) இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னாலிருந்து குளிர்காயும், மாணவர்களுக்குள் சாதிய உணர்வை தூண்டிவிடும் தேவர்பேரவை போன்ற அமைப்புகளின் மீதான உடனடி நடவடிக்கை.
5) ஒருவாரத்துக்கும் மேலாக கல்லூரி வளாகத்துக்குள் ஆயுதங்களோடு சுற்றிவந்து அச்சுறுத்தியவர்களிடமிருந்து மாணவர்களை காக்க தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதான கடும் நடவடிக்கை.

No comments: